சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் வாடகை, உண்டியல் மற்றும் இதர கட்டணங்கள் வாயிலாக ஆண்டுக்கு ரூ150 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கோயில் வரவு-செலவு மற்றும் சொத்து பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, வருவாய்த்துறை தாலுகா அடிப்படையில் 224 ஆய்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கோயில்கள் ஆய்வர்களால் முழுமையாக ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் களப்பணி ஆய்வர் பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், தற்போது, 117 ஆய்வர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிதாக இந்த இடம் எங்கெங்கு உருவாக்குவது என்பது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் அனைத்து உதவி ஆணையர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒவ்வொரு ஆய்வர் பிரிவுக்கும் ஆட்சி எல்லை, வட்டம் அல்லது குறுவட்டம் வாரியாக குறிப்பிட வேண்டும். பட்டியலை சார்ந்த கோயில்கள் எண்ணிக்கை மற்றும் பட்டியலை சாராத கோயில்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.
ஒரு வட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் முடிந்தவரையில் ஒரே ஆய்வர் பிரிவில் வரும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் புதிதாக ஆய்வர் பணியிடங்களை உருவாக்கப்–்பட்டு ஆய்வர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.