பர்கனஸ்: கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியுரிமை திருத்த சட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தப் போவதாக பாஜ அதிரடியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு ஆளான இந்து, கிறிஸ்து, ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மை மத மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய, ‘குடியுரிமை திருத்த சட்டம்’, கடந்தாண்டு டிசம்பரில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் இது உடனடியாக சட்ட வடிவம் பெற்றது. ஆனால், இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் உச்சகட்டமாக கடந்த மார்ச்சில் டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில் பலர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அதே மார்ச்சில் கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு காரணமாக இந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கொரோனாவால் ஓரம் கட்டப்பட்டு இருந்த இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை, அடுத்தாண்டு ஜனவரி முதல் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என பாஜ பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மேற்கு வங்க பாஜ மேலிடப் பார்வையாளருமான கைலாஷ் விஜய் ராகவய்யர் நேற்று தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம், பர்கனஸ் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பிறகு, அவர் அளித்த பேட்டியில், ‘‘நியாயமான காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அகதிகளின் நலனுக்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவுமே மத்திய அரசால் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும்,’’ என்றார்.