பூந்தமல்லி: திருமுல்லைவாயல் செந்தில் நகர் கபிலர் தெருவை சேர்ந்தவர் பிரேம்நாத்(42). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை எதிரே சென்றபோது நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்ட பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பிரேம்நாத் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் வெகுநேரமாக ஆம்புலன்ஸ் வராததால் சடலம் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் நீண்டநேரம் கொட்டும் மழையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த ஆம்புலன்சில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றது.