புதுக்கோட்டை : திருக்குளம் நிரம்பி வழிந்ததால், அரங்கநாதர் கோயிலில் மழைநீர் சூழ்ந்தது. தண்ணீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக உயரமான ராஜகோபுரம் அமைக்க பெற்ற திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்கநாதர் கோயில் பல நூறு ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்து கோயிலாகும் இக்கோயிலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீர் கோயிலுக்குள் புகுந்து கோயில் மூலவர் சுயம்புலிங்க அரங்குளநாதர் சன்னதி தண்ணீரில் மூழ்கியது.
அதனை சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சரஸ்வதி, துர்க்கை அம்மன், நடராஜர் சன்னதியிலும் தண்ணீரில் சூழ்ந்தது. இதேபோல் நவக்கிரகங்கள் உள்ள பகுதியை நந்தி பகவான் அந்த பகுதியை தண்ணீரில் மூழ்கியது. இதை தொடர்ந்து காலையில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றியுள்ளனர்.
இருந்தபோதிலும் தண்ணீர் ஊற்றெடுத்து வந்து கொண்டே இருந்தது. கோயில் அருகில் உள்ள திருக்குளம் நிரம்பி வழிந்தால் அதில் இருந்து வரும் தண்ணீர் கோயிலுக்குள் புகுந்தது. விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க ஆன்மீக அன்பர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.