×

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களுக்கு, கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை  நடத்தாமல் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எதிர்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அதில், “ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை  ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே  நடத்த வேண்டும்.

இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும்  மறுவரையறை ஆணையம் கண்காணிக்கும்’’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமனியன்  ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன் வாதத்தில், “தமிழகத்தில் நிலுவையில் இருக்கும், அதாவது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை  கிட்டதட்ட முடிந்த நிலையில் உள்ளது. கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தும் சூழலும் தற்போது இல்லை. இதை தவிர வாக்கு இயந்திரங்களும் போதுமானதாக உடனடியாக வழங்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம்  அவகாசம் வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி நேற்று உத்தரவிட்டனர். இதனால்  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் என தெரியவந்துள்ளது.


Tags : elections ,Supreme Court ,Tamil Nadu , Extension of 6 more months to hold local elections in Tamil Nadu: Supreme Court order
× RELATED பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார...