சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக தினசரி 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே பயணம் செய்ததால் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொரோனா அச்சத்தை போக்க க்யூ-ஆர் கோடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பயணிகள் தொடுதலின்றி டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியும். இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தினசரி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களில் மட்டும் 19 லட்சத்து 22 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.