×

பெண்ணிடம் அநாகரீகமாக பேசிய காவலர்: இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது என நீதிபதிகள் வேதனை

மதுரை : இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சங்கரன் கோவில் பேருந்து நிலையத்தில் காவலர் ராமசந்திரன் என்பவர் குறவன் இன பெண்ணிடம் பணம் தருகிறேன் வா என்று பேசி தவறாக நடக்க முயன்றதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேற்கண்ட வழக்கின் இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள், சமூகத்தின் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பொது இடங்களில் காவல் துறையினர் அநாகரிகமாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது.சங்கரன்கோவிலில் குறவர் இனப் பெண்ணிடம் அநாகரீமாக நடந்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காவலர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி.அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், சமூக ஊடகங்களில் வரும் குற்றச் செய்தி குறித்து விசாரிக்க காவல்துறை தனிப்பிரிவு ஏன் அமைக்கக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல தனிப்பிரிவை அமைக்கலாமே என்றும் கருத்து தெரிவித்த நிலையில், தனிப்பிரிவை அமைப்பது பற்றி தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட்டனர்.


Tags : Policeman ,Judges ,women ,India , Police, India, Women, Security, Judges, Pain
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...