பொன்னை : பொன்னை அருகே வெள்ளத்தில் அடித்துச்சென்ற சாலையால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்தின்றி அப்பகுதிமக்கள் தவித்து வருகின்றனர்.நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் பொன்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையம் செல்லும் சாலை பொன்னை பெரிய ஏரி நிரம்பியதால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.
எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம் மற்றும் என்.பி.என். பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது, இந்த சாலை பழுதடைந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.