திருவண்ணாமலை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப பெருவிழா கடந்த 29ம் தேதி நடந்தது.
அதைத்தொடர்ந்து, கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில், கடந்த 3 நாட்களாக தெப்பல் உற்சவம் நடந்து முடிந்தது. இந்நிலையில், விழாவின் நிறைவாக நேற்று இரவு அண்ணாமலையார் கோயிலில், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது.
அப்போது, கோயில் ஊழியர்கள், திருபணியாளர்கள் மட்டும் உற்சவத்தில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், 2,668 அடி உயர மலை மீது கடந்த 29ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 5வது நாளாக நேற்று காட்சியளித்தது. வரும் 9ம் தேதியுடன் மகா தீபம் நிறைவடைகிறது.