புதுடெல்லி: மாஸ்க் அணியாதவர்களை கொரோனா மையத்தில் பணிபுரிய அனுப்ப வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.. குஜராத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் மிகவும் அலட்சியமாக இருந்த வீடியோ வைரலாகியது.இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. அப்போது, ‘முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களை பிடித்து, கொரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும்,’ என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்துல உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், ‘கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த சூழலில் முக்கவசம் அணியாதவர்களை கொரோனா மையத்தில் கட்டாயமாக பணி அமர்த்த வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எப்படி சாத்தியமாகும். இதனால், வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை தான் அதிகமாகும். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதித்தது. இருப்பினும், முகக்கவசம் அணியாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது.