கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை டி.ஆர்.பி நகரில் தரைப்பாலத்தில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் அப்பகுதியில் சென்ற மினி லாரியில் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் லாரியோடு 500 மீட்டர் தண்ணீரில் அடித்து சென்றனர். உடனே. அதில் ஒருவர் அங்கிருந்த மரத்தை பிடித்துக் கொண்டார். மற்ற நால்வரும் லாரியின் மேல் ஏறி நின்று கொண்டனர். இதை அறிந்த எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளி, எம்.டி.சி.சுகுமார், முனிரத்தினம், விக்னேஷ், ஜெ.சுரேஷ் ஆகியோர் மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சி.எம்.ஆர். முரளி பெரிய கயிற்றை வீசி லாரியில் ஏறி நின்றவர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டார். மரத்தை பிடித்து நின்றவரையும் அவருடன் வந்தவர்கள் காப்பாற்றினர்.
சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல், ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ் சிவகுமார் ஆகியோர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிந்து(22), சப்ஜி(23), செஞ்சியை சேர்ந்த சிவா(22), லாரி டிரைவர், ஆனந்தன்(55), திருவண்ணாமலையை சேர்ந்த அப்சர்(23) ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் துரிதமாக மீட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளியை கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும், அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.