×

நடுவானில் இயந்திர கோளாறு இலங்கை விமானம் சென்னையில் தரையிறங்கியது: 164 பேர் உயிர் தப்பினர்

சென்னை: கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. விமானத்தில், 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 164 பேர் இருந்தனர். விமானம் இரவு 7.30 மணியளவில் சென்னை வான்வெளியை கடந்து நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார். சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக சென்னை விமான நிலையத்திற்கு அவசரமாக தகவல் கொடுத்து விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டனர். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தபின்பு விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அந்த விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. அதுவரை பதற்றத்தோடு நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, சர்வதேச விமானநிலைய பயணிகள் ஓய்வு கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை. எனவே, இலங்கையிலிருந்து வரவிருக்கும் மாற்று விமானத்தில் பயணிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு,நல்வாய்ப்பாக 164 பேர் உயிர் தப்பினர்.இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : SriLankan ,plane crashes ,Chennai , SriLankan plane crashes in Chennai: 164 people survive
× RELATED பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து