சென்னை: ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதிய கட்சி அறிவிப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதனை வரவேற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்; அவரது வரவு நல்வரவாகட்டும் என கூறினார். கூட்டணி குறித்த கேள்விக்கு எதிர்வரும் காலங்களில் எதுவும் நடக்கலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.