கூடலூர்: கூடலூர் வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கண்டறிய தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், யானை-மனித மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக புது முயற்சியை கூடலூர் வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தானியங்கி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். கேமராவில் பதிவாகும் புகைப்படங்களை கொண்டு அந்த யானை கூடலூர் பகுதிகளில் நிரந்தரமாக திரியும் யானையா? அல்லது முதுமலை, கேரளா வனப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானைகளா? என கண்டறிய முடியும்.
இதன் மூலம் மனிதர்களை தாக்கும் யானை எது? என்று எளிதாக கண்டறிய முடியும் அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் யானை மனித மோதல்களை தடுக்க முடியும். இதேபோன்று கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட 5 வனச்சரகங்களிலும் கேமராக்கள் பொருத்தி யானைகளின் அடையாளங்களை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு வனத்துறையினர் கூறினர்.