புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டரும், சுகாதாரத்துறை செயலருமான அருண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், மருத்துவர்கள் ஆலோசனையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் கோவிட் பிரிவில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமை செயலர் அஸ்வனிகுமார் ஆகியோர் நேற்று மாலை ஜிப்மருக்கு வந்தனர். மூன்றாவது தளத்துக்கு லிப்ட்டில் சென்றபோது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் 30 நிமிடம் லிப்ட்டின் உள்ளே சிக்கி தவித்தனர். ஊழியர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர். அதன்பிறகு, மற்றொரு லிப்ட்டில் ஏறி சென்று கலெக்டரை சந்தித்து நலம் விசாரித்தனர்.