×

சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கதர் கட்சியில கிளம்பிய பூகம்பம் குறித்து சொல்கிறார்

‘‘என்னது ஆசிரியர்களை மூதாட்டிகள் வசைப்பாடினாங்களா... எதுக்கு என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிராமங்களில் வயசானவங்களுக்கு கல்வி போதிக்க, அறிவொளி திட்டம்னு பல வருசத்துக்கு முன்னாடி கொண்டு வந்தாங்க. தொடங்குன சில வருசத்துலயே அப்படியே நின்னுபோச்சு. இப்போ அதே திட்டத்த தூசுதட்டி, கற்போம், எழுதுவோம்  இயக்கம்னு கொண்டு வந்துருக்காங்க. இந்த இயக்கத்துல சேர்ந்து கிராமத்துல இருக்கிறவங்கள படிக்க வைக்க, அந்தந்த பகுதி அரசுப்பள்ளி வாத்தியாருங்க முயற்சி செஞ்சிட்டு வராங்க. ஒரு சில இடங்கள்ல ஆர்வத்தோட சிலர் வராங்க.  அதேசமயம், மாங்கனி மாவட்டத்துல சில இடங்கள்ல அழைக்க போன வாத்தியாருங்களுக்கு நல்லா வசை பாட்டு தான் விழுதாம். குறிப்பா, ‘‘ஏற்கனவே படிச்ச என் பையன், பேரன் எல்லாம் வேல கெடைக்காம இன்னும் வீட்டுல தான்  இருக்காங்க. கவர்மென்ட் அவங்களுக்கெல்லாம் என்ன வேல கொடுத்துச்சு. இதுல என்னைய படிக்க வச்சு, என்ன வேல வாங்கி தரப்போறீங்க. போயி வேற வேல இருந்தா பாருங்கன்னு,’’ முதியவர்களும், மூதாட்டிங்களும் டோஸ்  விடுறாங்களாம். இதனால வாத்தியாருங்க என்ன செய்யுறதுன்னு தெரியாம விழிபிதுங்கி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கதர் கட்சிக்குள் பூமராங் ஆன புதிய பதவி திட்டம் கொண்டு வந்த கதையை சொல்லுங்க..’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு தயராகும் வகையில் கதர்கட்சி தயராகி வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் முரண்டு பிடித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொகுதிகள் வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.  ஆனால் கட்சிக்காரர்கள் வாரியம், கூட்டுறவு துறைகளில் உறுப்பினர் பதவி, அறங்காவலர் குழு உறுப்பினர் என எந்த பதவியும் கிடைக்காமல் கடும் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் எப்படி தேர்தலை எதிர்கொள்வது  என்ற கவலை கதர் கட்சி முக்கிய நிர்வாகிகளை வாட்டுகிறதாம். சோர்ந்துபோய் கிடக்கும் தொண்டர்களை சரிகட்ட கட்சி பதவி கொடுத்து உற்சாக மூட்டலாம் என்று முடிவெடுத்தார்கள். இப்போது நடைமுறையிலுள்ள தொகுதிக்கு ஒரு வட்டார  தலைவர் என்ற முறையை மாற்றி கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து புதிய பதவிகளை வார வழங்கி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவரை இரண்டாவது தலைவராக நியமிக்கிறார்களாம். இந்த  நடவடிக்கையால் கட்சிக்காரர்கள் உற்சாகமடைவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பூமராங் ஆகிவிட்டதாம். அடிமட்ட கட்சியினரிடையே கோஷ்டி சண்டை உருவாகி விஷயம் பூதாகரமாகிவிட்டதாம். வட்டார தலைவர் பதவியை மட்டும்தான்  தான் பிரிப்பாங்களா... ஏன், மற்ற கட்சிகளில் உள்ளது போல மாநில பதவிகளை உடைத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியதானே என கட்சி தலைமையை பிடித்து உலுக்கி வருகிறார்களாம் கதர் கட்சி தொண்டர்கள். இதனால மாநில  நிர்வாகிகள் தங்கள் பதவியை பிரித்து பாதி பதவி கொடுத்துவிடுவாங்களோ. என்ற அச்சத்துடன் இருக்காங்களாம்.. மாநில பதவி மீது கை வைக்கக் கூடாது என்று மாநில தலைையிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம்...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘சிவகங்கையில இலையும் தாமரையும் மோதிக் கொள்கிறார்களாமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியின் சிட்டிங் எம்பியான  இலைக்கட்சியின் ‘முருகப்பெருமான்’ பெயர் கொண்டவருக்கு சீட்  வழங்கப்படவில்லை. அத்தொகுதி தாமரை கட்சிக்கு வழங்கப்பட்டது. அங்கு டெபாசிட் இழந்தது தாமரை.  அப்போது  கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்ததால், அதிருப்தியில் இருந்த இலை கட்சியின்  ‘முருகப்பெருமான்’ பெயர் கொண்டவருக்கு, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில்,  காரைக்குடி எம்எல்ஏ தொகுதி சீட்  கட்டாயம் கொடுப்போம் என்று  தலைமை உறுதி  தந்ததாம்... எனவே இலைக்கட்சியினர் தேர்தலை மனதில் கொண்டு தீவிரமாக பணி  செய்து வந்தாங்களாம்... தற்போது தாமரைக்கட்சியினரோ, தங்களுக்குத்தான் சீட்  கிடைக்கும். மேலிடத்தில் சொல்லி பெற்று  விடுவோமென முழுமூச்சாய்  களமிறங்கிட்டாங்களாம்... இதனால் ‘முருகப்பெருமான்’ ஆதரவாளர்கள் மீண்டும்  கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்களாம்... மேலும் இரண்டு கட்சி தொண்டர்களிடையே அடிக்கடி முட்டல் மோதல்  ஏற்படுகிறதாம்.. இப்படியே போனால் ேதர்தலில் ஒரு கட்சிக்கு இன்னொரு கட்சி வேலை செய்யாது என்று இரண்டு கட்சியிலும் பேச்சு ஓடுது...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘ பணிநிரந்தரம் இல்லாமல் யாரு தடுமாறுகிறார்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்தில் மொத்தம் 104 டாஸ்மாக் சில்லரை மதுபான   விற்பனை கடைகள் இருந்தன. இதில் தற்போது 84 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் தற்போது, ‘டெபுடேஷன்  ஒர்க்’ என்கிற  அடிப்படையில் தற்காலிக மாற்றுப்பணியாளர்களாக  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடைக்கு அனுப்பும் நிலை உள்ளது.  இதனால் தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடத்தில் பணியாற்ற முடியாமல் உள்ளதாக புலம்புகின்றனர்.  அதிலும் நிர்வாகத்திற்கு வேண்டிய பணியாளர்களை மட்டுமே கடைகளுக்கு மாற்றப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பணி தருவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.


Tags : Qadir ,party ,earthquake ,assembly elections , Qadir talks about the earthquake in the party ahead of the assembly elections
× RELATED நாட்டின் நலனுக்காக யாருடனும்...