சென்னை: கோவில் பூசாரிகள் நலச்சங்கம் மாநில தலைவர் வாசு அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூருக்கு எழுதியுள்ள கடிதம்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களை நிர்வகிக்க கூடுதலாக 9 இணை ஆணையர்களையும், அவர்களுக்கான அலுவலகங்களையும் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை கோயில் நிதியை வீணடிக்கும் செயலாகும். தற்போது பதவி உயர்வுக்கு காத்திருக்கும் துணை ஆணையர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆணையால் கோயில் மேம்பாட்டுக்கோ, வருவாய் உயர்வக்கோ எந்த பயனும் இல்லை.
இதற்காக, 9 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். இதுந்த தேவையற்ற நியமனங்களால் கோயில்களில் நிதி விரயமாகுமே தவிர ஒரு ரூபாய் கூட வருவாய் உயரப்போவதில்லை. புதிதாக இணை ஆணையர் பணியிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக, கிராமப்புற கோயில்களையும், அவற்றை நம்பி வாழும் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்படுத்தினால், கிராமப்புற கோயில்களும் மேம்பாடு அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.