சென்னை: அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவர்கள் 2019 அக்டோபர் 30ம் தேதி, முதல்வர் எடப்பாடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை நிறுத்தினர். ஆனால், அதன்பிறகு, 118 அரசு மருத்துவர்கள், நீண்ட தொலைவுக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். 2020 பிப்ரவரி 28ம் நாள், மருத்துவர்கள் பணி இட மாற்றத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. ஆயினும், இன்னமும் சில மருத்துவர்களின் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.