சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கொள்கைகளை கடைபிடிப்பதிலும், பரப்புவதிலும் பெரும்பங்கு வகித்த திருச்சி எம்.கோபாலகிருஷ்ணன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இவர் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய கொள்கைகளின் மீது மிகுந்த பற்று கொண்டவர். மிகச் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி. தேசிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
ரயில்வே துறையில் பணியை தொடங்கிய எம்.கோபாலகிருஷ்ணன் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றி, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அரும்பாடுபட்டவர். அவர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்..