குடியாத்தம்: நிகர் புயலால் பெய்த கனமழை காரணமாக குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி, கவுன்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்டன்ய மகாநதியில் இருந்து குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதனால் பெரிய ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் புத்தர் நகர், பீமன்பட்டி, கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஏரியின் 3 மதகுகளும் சரியான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
புத்தர் நகர் அருகே உள்ள மதகில் இருந்து வெளியேறும் தண்ணீர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், தனலட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பழுதடைந்துள்ள மதகுகுளை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.