×

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!

கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ஷுப்மன் கில் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதன் பின், தவான் 16 ரன்கள், ஷுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் கோஹ்லி நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்தார். மொத்தமாக 242 ஒருநாள் போட்டியில் வியைளாடி 12,000 ரன்களை குவித்துள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் விராட் கோலி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள்  , கே.எல்.ராகுல் 5 ரன்கள் என அடுத்தது ஆட்டமிழந்த நிலையில், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா அதிரடியாக ஆடி களத்தில் நிலைத்து நின்றனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 302 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 92 ரன்கள் , ஜடேஜா 66 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச போட்டியில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடியால் விக்கெட்கள் சரியான இடைவெளியில் சரிந்த வண்ணம் இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 289 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பின்ச் 75 ரன்கள், மெக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : Consolation win ,India ,Australia , India, Australia, ODIs, wins
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!