×

திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடல்

அறந்தாங்கி: கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மணமேல்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 9 ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிர்வாகம் இடம் தேடி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக் கூடிய இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி, சென்னை என 2 முக்கிய துறைமுகங்களை இணைக்கும் சாலையாகவும் இந்த சாலை உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனக்கு சொந்தமான பேருந்துகளை பராமரிக்க ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பணிமனை நிறுவி உள்ளது. ஒரு நகரில் பணிமனைகள் அமைக்கப்பட்டால், அந்த பணிமனையில் இருந்து பல புதிய வழித்தடங்களில் குறிப்பாக பல குக்கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்கும் வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு பகுதிகளில் புதிதாக அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை நிறுவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 3 இடங்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் இருந்தன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த திமுக ஆட்சியின் போது அறந்தாங்கி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த உதயம் சண்முகம் கோரிக்கையை ஏற்று அப்போதைய தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மணமேல்குடியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை திறந்து வைத்து,பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகளையும் இயக்கி வைத்தார்.மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை வாடகை கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது. அங்கு மேலாளர், அலுவலர்கள், மெக்கானிக்குகள், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மணமேல்குடி பணிமனையில் தினசரி பல பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டன. தொடர்ந்து மணமேல்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்ட ரூ1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. அரசு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆனபோதிலும், அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இடத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி தரவில்லை.

இதனால் தொடர்ந்த வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றிய பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். அதேப்போல அங்கு நிறுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து மணமேல்குடி வந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து மட்டுமே அங்கு நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாவலர் மட்டுமே பணியில் இருந்தார். இந்நிலையில் மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மின்கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மணமேல்குடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடிவிட்டு, வாடகை கட்டிடத்தில் இருந்து வெளியேறியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:
மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்ற நோக்கத்திலும், கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரத்தில் இருந்து வரும் அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளவும், பேருந்துகளின் தன்மையை பரிசோதனை செய்து கொள்ளவும் கடந்த திமுக ஆட்சியில் மணமேல்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொடங்கப்பட்டது.

தொடர்ந்து பணிமனை கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கியது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் பணிமனை அமைக்க போக்குவரத்து கழகத்திற்கு இடம் ஒதுக்கி தரவில்லை. இதனால் சுமார் 10ஆண்டுகளாக மணமேல்குடி பணிமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. மணமேல்குடிக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல பணிமனைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. ஆனால் மணமேல்குடி பணிமனைக்கு இன்னும் நிர்வாகம் இடம் தேடிக்கொண்டுதான் உள்ளது.

கடந்த 2018-19ம் ஆண்டு தமிழக சட்டசபையில் கொள்கை விளக்க குறிப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணமேல்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்யப்படும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் கூறி 2 ஆண்டுகள் ஆனநிலையில் மாவட்ட நிர்வாகம் இன்னும் இடம் ஒதுக்கி தரவில்லை. இந்நிலையில் தனியார் இடத்தில் பெயரளவில் இயங்கி வந்த மணமேல்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை திடீரென்று மூடப்பட்டுள்ளது.

திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால், அதிமுக அரசு மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இடம் ஒதுக்காமல் கிடப்பில் போட்டு தற்போது, பணிமனையை மூடியுள்ள அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த எந்த கட்சி கொண்டு வந்தாலும், அது மக்களின் திட்டம் என்ற கோணத்தில் செயல்படாமல், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கடந்த 10 ஆண்டுகளாக இடம் ஒதுக்காமல் அதிமுக அரசு அலட்சியம் செய்தது.

இந்த நிலையில் தற்போது முக்கியத்துவம் அதிகம் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையையே மூடி இப்பகுதியின் வளர்ச்சியையே தடுக்கும் செயலை செய்துள்ளது.எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, மணமேல்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் ஒதுக்கி, அங்கு பணிமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Closure ,workshop ,Manamelkudi Government Transport Corporation ,DMK , Government Transport Corporation Workshop
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...