×

சாணார்பட்டி அருகே பரபரப்பு: விவசாயி வீட்டில் வெடிகுண்டு வீச்சு

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, நள்ளிரவில் விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே எல்லைப்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்துகுமார் (28). இவரது மனைவிக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிரபுகுமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த நாகமுத்துகுமார், பிரபுகுமாரை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன், தென்னை மர பூச்சி மருந்தை சாப்பிட்டு பிரபுகுமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதே ஊரில் உள்ள நித்யாவின் உறவினர் விவசாயி முருகேசன், இருதரப்பையும் சமாதானம் செய்துள்ளார். இதனிடையே, முருகேசன் வீட்டில் நேற்று அதிகாலை 1 மணியளவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு சென்றனர். இதில், ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது. முருகேசன் வெளியே வந்து பார்த்தபோது, அவரது டூவீலரிலும் ஒரு நாட்டு வெடிகுண்டு கட்டி வைத்தது தெரிய வந்தது.

முருகேசன் அளித்த புகாரின்பேரில், சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டு வெடிகுண்டை மீட்டு விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் மேக்ஸ் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் சாணார்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sanarpatti ,house , Bomb
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...