சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தினால் அதன் பல்லுயிர் தன்மை முற்றுலும் அழிந்து போகும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சதுப்பு நிலத்தை ஈர நிலங்களின் பட்டியல் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முக்கிய நன்னீர் சதுப்ப நிலமாகும். இந்த சதுப்ப நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்லுயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த சதுப்பு நிலத்திற்கு வந்து ெசல்லும். இவ்வளவு இயற்கை தன்மை கொண்டு பள்ளிகரணை சதுப்பு நிலம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது.
குறிப்பாக பல்வேறு அரசு நிறுவனங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், தனியார் குடியிருப்புகள், மாநகராட்சியின் குப்பை கொட்டும் வளாகம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அந்த நன்னீர் தன்மையை இழந்து வருவதாக சுற்றுச்சூழல் வல்லுனர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்த போவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சுற்றுசூழல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின் கூறியதாவது : பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்ப பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னைக் கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது ஒரு செழிப்புமிக்க வாழிடம்.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிலவமைப்பு, மண்ணின் தன்மை ஆகியவற்றால் ஏராளமான உயிரினங்கள் அப்பகுதிக்கு வருகிறது. இவற்றில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களும் அடங்கும். இந்த சதுப்புநிலத்தின் இயற்கைத் தன்மையை சிதைப்பது அதை நம்பியிருக்கும் எண்ணற்ற உயிரினங்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அரசே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். தற்போதுகூட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியான பெரும்பாக்கத்தில் (சோழிங்கநல்லூர் மேடவாக்கம் இடையே) சாலை விரிவாக்கத்துக்காக சதுப்புநிலத்தின் பெரும்பகுதி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக்க முயல்வது அதன் பல்லுயிரின வளத்துக்கு சமாதி கட்டுவதற்கு ஒப்பானது. இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் 3 சதுப்பு நிலம்
இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரின வளமிக்க 94 சதுப்பு நிலங்கள் உள்ளது. இதில் மூன்று இடங்கள் தமிழகத்தில் உள்ளது. அதில் ஒன்று தான் பள்ளிக்கரணை சதுப்புநிலம்.
சிஏஜி அறிக்கை சொன்னது என்ன?
2015 பெரு வெள்ளம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் 1975ம் ஆண்டு 5000 ஆயிரம் ஹெக்டேராக இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2016ம் ஆண்டு 695 ஹெக்டேராக சுருங்கிவிட்டது என்று கூறப்பட்டிருந்து. இதற்கு முக்கிய காரணம் ராஜிவ் காந்தி சாலையில் தகவல் தொழில்நுட்ப வழிதடம் அமைத்தது என்று கூறப்பட்டு இருந்தது.
சதுப்ப நிலத்தில் வாழும் பறைவைகள்
உயிரினங்கள் வகை
வலசைப்பறவை 65
உள்ளூர் பறவை 105
மீன் இனங்கள் 50
பாம்புகள் 15
பல்லிகள் 10
இருவாழ்விகள் 11
பாலூட்டிகள் 10
வண்ணத்துப்
பூச்சி 34
தட்டான்கள் 20
தாவரங்கள் 167
ஓட்டுடலிகள் 24
கரப்பான்கள் 8