சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் வரும் 31ம் தேதி வரை பொது இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் எல்லையில் 4 பேருக்கு மேல் பொது இடங்களில் ஒன்று கூட கூடாது, பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம், தெரு முனை கூட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் நிகழ்ச்சிகள் கடந்த 30ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்த மாநகர காவல் துறை தடை வித்துள்ளது. அதைதொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வல் நேற்று முதல் வரும் 31.12.2020ம் தேதி வரை பொது இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பொது கூட்டங்கள் நடத்த வருவாய் துறை வழிகாட்டி நடைமுறைப்படி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் தடை உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.