மதுரை : மத்திய அரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பல சரணாலயங்கள் அமைக்கப்பட்டு அவற்றை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவு சூழல் உணர்திறன் மண்டலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 கிலோ மீட்டர் தொலைவை 3 கிலோ மீட்டராக குறைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து கன்னியாகுமரியை சேர்ந்த சதீஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு குமரி மாவட்டத்தில் சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 3 கி.மீ.என நிர்ணயம் செய்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது,மொழி என்பது முக்கியமானது. தகவல் தொடர்பில் முக்கிய பங்காற்றுகிறது. மக்கள் புரியும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் . மத்திய, மாநில அரசுகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மொழியிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உத்தரவிடப்படுகிறது,இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.