திருப்பதி: திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சி கமிஷனர் தலைமையில் நேற்று நடந்தது. திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ‘டயல் யுவர் கமிஷனர்’ நிகழ்ச்சியில் கமிஷனர் கிரிஷா, தொலைபேசி மூலமாக பொதுமக்களிடமிருந்து 23 புகார்கள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் வந்த புகார்களில் பெரும்பாலும் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலமான காற்று வீசியதால் தெருவிளக்குகள் சேதமடைந்துள்ளது. வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி உள்ளிட்ட புகார்களை தொலைபேசி மூலமாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கமிஷனர் கிரிஷா கூறுகையில், ‘புகாரை பெற்றுக்கொண்ட உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும், அதன் விவரங்களை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கூறினார். இதில், கூடுதல் கமிஷனர் ஹரிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.