பெலகாவி: அமைச்சர் பதவி வழங்குவதாக முதல்வர் தெரிவித்துள்ள பிறகும் அடிக்கடி அமைச்சர் பதவி கேட்டு தொந்தரவு செய்வது சரியல்ல என்று எம்.எல்.ஏ மகேஷ் குமட்டள்ளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெலகாவியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காங்கிரசிலிருந்து வந்து மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைய காரணமானவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முதல்வருக்கும் பாஜவுக்கும் எந்த சங்கடத்தையும் ெகாடுக்க விரும்பவில்லை. முதல்வர் எடியூரப்பா வரும் நாட்களில் அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் 2023 வரை எடியூரப்பாவே முதல்வராக நீடிப்பார்.
காங்கிரசிலிருந்து வந்த எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் ெதரியாது. நான் பணியில் கவனமாக உள்ளேன். இதைப்பற்றி எதுவும் என் கவனத்திற்கு வரவில்லை. முதல்வர் எடியூரப்பா எனக்கு கர்நாடக குடிசை அபிவிருத்தி மண்டல தலைவராக நியமித்துள்ளார். இந்த பதவி வழங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கனவே முதல்வர் எடியூரப்பா குடிசை வளர்ச்சி திட்டத்தில் சுமார் 97.137 வீடுகள் கொடுத்துள்ளார்.
குடிசை பகுதியில் வாழும் மக்கள் கண்ணீருடன் வாழ்கிறார்கள். அவர்களின் கண்ணீரை துடைக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜவில் இணைந்ததற்கு பெருமைப்படுகிறேன். இத்துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.