பெங்களூரு: முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியை பதவியிலிருந்து இறக்க சிலர் பல்வேறு சூழ்ச்சிகள் செய்தனர் என்று முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: முதல்வர் எடியூரப்பாவை தொகுதி வளர்ச்சி விஷயமாக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ்-பா.ஜ. உள்ஒப்பந்தம் செய்து கொண்டு மஜதவை அழிக்க முயற்சித்து வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பா.ஜவுக்கு 105 தொகுதிகளில் மாநில மக்கள் வெற்றி வாய்ப்பு வழங்கவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் செயலிழப்பு காரணமாக கிடைத்த வெற்றி. மதவாத சக்திக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் மஜதவை பா.ஜ.வின் பி டீம் என்று கேலி செய்கின்றனர். இதனால் கடந்த தேர்தலில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதே போல் இரண்டு தேசிய கட்சிகள் ஒன்றிணைத்து முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, நிகில்குமாரசாமி ஆகியோரை மக்களவை தேர்தலில் தோற்கடித்தனர். அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. ஆனால் நாம் தற்போதிலிருந்தே தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.