புதுடெல்லி: கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பரிசோதனைக் கட்டணத்தைக் குறைத்துள்ளது டெல்லி அரசு. பிசிஆர் பரிசோதனை கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து, 800 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு அனைத்து தனியார் பரிசோதனை மையங்கள், தனியார் மருத்துவமனைகளிலும் அமலுக்கு வருகிறது என்று டெல்லி சுகாதாரத்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு எல்லோருக்கும் சென்று சேரும் வகையில், பொதுமக்களின் பார்வையில் படும்படியான அறிவிப்பையும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.