திருமலை: ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் மாநகராட்சி பதவிகளுக்கான தேர்தலையொட்டி, பாஜ, காங்கிரஸ், ஆளும் டிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் கட்சிகளுக்கிடையே நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. கட்சி தலைவர்களின் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 74 லட்சத்து 44 ஆயிரத்து 260 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். மொத்தம் உள்ள 150 வார்டுகளில் 1,522 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இம்முறை ஐதராபாத்தில் மேயர் பதவியை பிடிக்க பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்குகள் 4ம் தேதி எண்ணப்படும்.