சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. நேற்று வரை தமிழகத்தில் இயல்பான மழையளவு 352.6 மி.மீ., 301.8 மி.மீ. அளவு மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைவிட 14 சதவீதம் குறைவாகும். சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும், கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேடை, வேலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பான அளவும், மீதமுள்ள 16 மாவட்டங்களில் இயல்பைவிட குறைந்த மழை பதிவாகியுள்ளது.