சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் என பல கட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவு கட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது. அப்போராட்டத்தின் வடிவமும், போராட்ட தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.