திண்டுக்கல்: வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல்லில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே கக்கன் நகரில் பொதுமக்கள் வசித்து வந்தனர். கடந்த 35 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்-கரூர் அகல ரயில்பாதைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இங்கு வசித்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி 34வது வார்டில் உள்ள பர்மா காலனியில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி தந்தது. அந்த இடத்தில் 35 வருடங்களாக பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் வீடுகளில் இன்று கருப்புக் கொடி கட்டி மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வீட்டுமனை பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட போவதாக கக்கன் நகர் மக்கள் தெரிவித்தனர்.