×

நிவர் புயல், தொடர் மழையால் முறிந்து விழுந்த சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் கைவிரிப்பு: கடலூர் விவசாயிகள் வேதனை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக முறிந்து விழுந்த சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 25ம் தேதி நிவர் புயலாக கரையை கடந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 29 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது. தொடர் மழை மற்றும் புயலால் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, மணிலா உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், சவுக்கு மரங்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் பரவலாக சுமார் 5,000 ஏக்கர் அளவில் சவுக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. நன்கு வளர்ந்த மரம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வெட்டப்பட்டு பேப்பர் உற்பத்தி மற்றும் கட்டுமான பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கிடையே கடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி ,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை வளர்ந்த சவுக்கு மரங்கள் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் புயல் மற்றும் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று முறிந்து விழுந்த மரங்கள் உரிய பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமலும் விலை போகாத நிலையும் உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

புயல் மற்றும் தொடர் மழை காலங்களில் முறிந்து விழும் சவுக்கு மரங்களை மாவட்ட நிர்வாகமே பயன்பாட்டிற்கு எடுத்து செல்லும். அதேபோன்று தற்போது முறிந்து கிடக்கும் மரங்களை மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டுக்கு எடுத்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர். தானே உள்ளிட்ட புயல் தாக்கத்தின் போது பாதிப்புக்குள்ளான சவுக்கு மரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கி உள்ளது. ஆனால் தற்போது சவுக்கு மரங்களை விவசாய பயன்பாட்டில் இருந்து அகற்றி வனத்துறையின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை சவுக்கு மரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்க இயலாது எனவும் சம்மந்தப்பட்ட விவசாயத் துறையினர் கூறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதிப்புக்குள்ளான சவுக்கு மரங்களுக்கு இழப்பீடு பெற முடியாமலும் அதனை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே சவுக்கு மரங்களை விவசாய சாகுபடியில் சேர்த்து, நிவாரண பட்டியலில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Cuddalore ,storm ,Nivar , Cuddalore farmers in distress over relief whip trees
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!