திருத்துறைப்பூண்டி: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நேற்று திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜிலா திருமண மண்டபத்தில் நடந்த, மாற்றுக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா மற்றும் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: விடியலை நோக்கிய பிரசார பயணத்தில் நான் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக ஆட்சியின் அநீதிகளையும் ஊழல்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறேன்.
நான் ஒரு விவசாயி படிப்படியாக வளர்ந்ததாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இவர் தரையில் உருண்டு உருண்டு வளர்ந்தவர். சசிகலா காலைப் பிடித்து முதல்வரானவர். நமது தலைவரை பார்த்து கட்சியை காணொலி மூலமாக நடத்துவதாக பேசி வருகிறார். சென்னையில் புயல் அடித்தபோது முதலில் களத்தில் இறங்கியவர் நம்முடைய தலைவர்தான். கேவலமான ஆட்சி நடத்தும் அதிமுக, பாஜவை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்தது போல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இரவு 9.15மணிக்கு மன்னார்குடி வந்த உதயநிதி ஸ்டாலின் மதுக்கூர் சாலையில் டிஆர்பி கெஸ்ட் ஹவுசில் தங்கினார்.
இன்று காலை அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வடுவூரில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா தொகுதி நிதி மூலம் கட்டப்பட்டுள்ள விளையாட்டு ஸ்டேடியத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் மேல திருப்பாலக்குடி கிராமத்தில் கயிறு தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் கூத்தாநல்லூர் வழியாக திருவாரூர் வந்தார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருவாரூர் கீழவீதியில் திருமண மண்டபம் ஒன்றில் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் உதயநிதி ஸ்டாலின், பின்னர் வலங்கைமான் சென்று அங்கு விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். இரவு மீண்டும் திருவாரூர் வந்து சன்னதி தெரு இல்லத்தில் தங்குகிறார்.