×

கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்: எஸ்.ஜெகதீசன், தலைவர், சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கம்

மழைநீர் வடிகால்களை வாரம் தோறும் சரிபார்க்க வேண்டும். வெள்ளம், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் மழைநீர் வடிவதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சரிவர கண்காணிக்க வேண்டும். நீர் மேலாண்மையை பொறுத்தவரை மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொதுமக்கள் அரசை மட்டுமே நம்பி இல்லாமல் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள கால்வாய்களை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை வடிகால்களில் கொட்டாமல் இருக்க வேண்டும். மழைகாலங்களில் மட்டுமே வடிகால்கள் குறித்து புகார் தெரிவிக்கிறோம். ஆனால், வெயில் காலங்களில் அவற்றில் உள்ள பழுதுகளை சரிசெய்ய பொதுமக்கள் எந்தவித புகார்களும் தெரிவிப்பது இல்லை.

மழைநீர் வடிகால்கள் என்பது ஒவ்வொரு வருடமும் சென்னையில் பெரிய பிரச்னையாகவே உள்ளது. மேலும், நீர் மேலாண்மை திட்டங்களில் அரசு பொறியாளர்களுக்கு முக்கியத்துவதும் கொடுப்பது இல்லை. தொழில்நுட்பம் தெரியாத நபர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் வடிகால்களை அமைப்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது. வடிகால்கள் கட்டுவது பெரிய விஷயம் இல்லை. ஆனால், அதை எப்படி அமைக்க வேண்டும் என்பது பொறியாளர்களுக்கு மட்டுமே தெரியும். சாலை அமைப்பது, வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட எந்த பணிகளாக இருந்தாலும் அதில் 95 சதவீதம் திறமை வாய்ந்த பொறியாளர்கள் செய்வது இல்லை.

கட்டுமானத்தில் தரத்தை நிர்ணயிப்பது பொறியாளர்கள் தான். அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல், நீர்நிலைப்பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடு மற்றும் தொழிற்சாலைகளை கட்ட அரசு அனுமதி வழங்கக்கூடாது.
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை கட்டிடங்களாக உருவாக்கப்படுகிறது. அரசு அனுமதி வழங்காமல் இருந்தாலே போதும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. 10 நாட்களுக்கு முன்பாக கூட சிட்லபாக்கம் ஏரியை பட்டா போட்டு கொடுத்துள்ளார்கள். நீர்நிலை, நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டுமானத்தை அனுமதிப்பது அரசின் மிகப்பெரிய தவறு.

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் மூலம் தான் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பயம் வரும். ஏற்கனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் கால்வாய்களை முறையாக சீரமைக்க வேண்டும். சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மழையின் போது 88 இடங்களில் இவ்வாறு சாலைகளின் நடுவே பெருமளவில் மழைநீர் செல்ல வெட்டப்பட்டது. ஆனால், அதன்பின்னர் இவை மூடப்பட்டுவிட்டது.

எனவே, இவற்றை நிரந்தர பாதைகளாக மாற்ற வேண்டும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கால்வாயின் அகலத்தையும், ஆழத்தையும் பெரிதுபடுத்துவதன் மூலம் நீர் விரைவில் செல்ல அது ஏதுவாக இருக்கும். நீர் மேலாண்மைக்கு அரசு ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். வீடுகட்டுவோர் தங்களின் வீடுகளுக்கு முன்னர் உள்ள கால்வாய்களுக்கு முன்பாக சல்லடை போட்டு மூட வேண்டும் என்பதை சட்டமாக கொண்டுவர வேண்டும். அப்படி இருக்கும் போது மழைநீர் எளிமையாக வடிகால் வழியே வெளியேற ஏதுவாக இருக்கும்.

மழைநீர் சேகரிப்பு என்பது ஆரம்ப காலத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால், நாளடைவில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதை சரிவர செயல்படுத்தவில்லை. இதனை கண்காணிக்கும் அதிகாரிகளும் இப்பணியை மேற்கொள்வதில்லை. இதனால், வெயில் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது தண்ணீர் பஞ்சம் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மழைநீர் தனியாகவும், கழிவுநீர் தனியாகவும் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு மட்டும் இல்லாமல் பொதுமக்களும் நீர் மேலாண்மை திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்கி அவற்றை கடைபிடிக்க வேண்டும். நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை கட்டிடங்களாக உருவாக்கப்படுகிறது. அரசு அனுமதி வழங்காமல் இருந்தாலே போதும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. 10 நாட்களுக்கு  முன்பாக கூட சிட்லபாக்கம் ஏரியை பட்டா போட்டு கொடுத்துள்ளார்கள். நீர்நிலை, நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டுமானத்தை அனுமதிப்பது அரசின் மிகப்பெரிய தவறு.

* மழைநீர் வடிகால் அமைப்பில் சரியான திட்டமிடல் இல்லை: சரவணன், ஆராய்ச்சியாளர், கடற்கரை வள மையம்
சென்னை நகரைப் போன்ற கட்டமைப்பு வேறு எந்த நகரத்துக்கும் கிடையாது. சென்னை நகரத்தின் மையத்தில் மட்டும் அடையாறு, கூவம் ஆகிய இரண்டு முக்கிய ஆறுகள் ஓடுகிறது. கூவம் நதி மெரினா கடற்கரை அருகே கடலில் கலக்கும். அடையாறு ஆறு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கும். மழைநீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவது மட்டுமே குடிநீர் வழங்கல் துறையின் பணியாக உள்ளது. பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு மழைநீர் தேங்காமல் வடிகால்கள் வழியே செல்வதற்கான அமைப்பை ஏற்படுத்துவதில் பெரிய பொறுப்பு உள்ளது.

இதேபோல், அரசுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. 20 வருடத்துக்கு முன்பாக அடையாறு ஆற்றில் எப்போதும் தண்ணீர் இருக்காது. வறட்சி காலத்தில் மணல் மட்டுமே இருக்கும். ஆனால், இப்போது கழிவுநீர் செல்லும் ஆறாக மாற்றிவிட்டார்கள். கூவம் மற்றும் அடையாறு ஆகிய 2 ஆறுகளையும் சரியாக நாம் பராமரித்தாலே நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும். மழைவெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி முக்கியமோ அதைவிட ஆறுகளை பாதுகாப்பது முக்கியம். 2015ம் ஆண்டு பெருவெள்ளம் வந்ததற்கும், தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இருந்ததற்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வடிகால்களில் அடைபட்டு கிடந்ததே முக்கிய காரணம் ஆகும். ஒரு திட்டத்தை கொண்டுவரும் போது அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

அப்படி பின்பற்றாமல் இருந்தால் திட்டம் கொண்டுவந்ததே பலன் இல்லாமல் போகும். எந்த ஒரு திட்டத்தையும் தொடர்ந்து நிர்வாக ரீதியாகவும் பின்பற்ற வேண்டும். அப்போது தான் எந்தவித பிரச்னையும் இல்லாமல் திட்டம் தொடர்ந்து செயல்படும். மாதத்திற்கு ஒருமுறையாவது மழைநீர் வடிகால்களை சீரமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கண்காணித்தாலே மழை காலங்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துகொள்ளலாம். இதேபோல், மழைநீர் சேகரிப்பு என்பது முக்கியமான ஒரு திட்டம் ஆகும். இத்திட்டத்தையும் முறையாக பின்பற்றுவது இல்லை. மழைநீர் சேகரிக்கும் இடங்களில் கூட சிமெண்ட் போட்டு மூடிவிடுகிறார்கள்.

பல இடங்களில் வடிகால்களை மறித்து வீடுகள் கட்டப்படுகிறது. வீடுகட்ட அனுமதி வழங்கும் சம்பந்தப்பட்ட துறையினரும் எந்த இடத்தில் வீடு கட்டுகிறார்கள், மழைநீர் செல்ல முறையான வழி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதில்லை. நிரந்தர தீர்வுகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. பிரச்னை நடக்கும்போது மட்டுமே தீர்வை தேடுகிறார்கள். இயற்கை கொடுத்த கட்டமைப்புகளை சரியாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, அத்திப்பட்டு புதுநகரில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மண் நிரப்பி அதற்கு மேல் தொழிற்சாலைகளை கட்டினார்கள். இதனால், அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. தொழிற்சாலைகள் வருவதற்கு முன்பாக இப்பகுதியில் கொஞ்சம் கூட தண்ணீர் தேங்காது.

குறிப்பாக, 2015 வெள்ளத்திற்கு பிறகு தான் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்பதையே நாம் உணர்ந்தோம். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்வது கிடையாது. அரசின் அனுமதி இல்லாமல் மக்கள் தவறு செய்ய முடியாது. ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த கழிவுநீரையும் சுத்திகரிப்பு செய்து அதை ஒரு தொழிற்சாலை, பூங்காக்கள், மரங்களுக்கு பயன்பாட்டிற்கு கொடுக்க முடியும். ஆனால், அதை செய்வதில்லை. தொலைநோக்கு சிந்தனையுடன் முறையான திட்டமிடல் என்பது மிகவும் அவசியம். நிரந்தர தீர்வுக்கான திட்டமிடல் இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்வது கிடையாது. அரசின் அனுமதி இல்லாமல் மக்கள் தவறு செய்ய முடியாது. ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த கழிவுநீரையும் சுத்திகரிப்பு செய்து அதை ஒரு தொழிற்சாலை, பூங்காக்கள், மரங்களுக்கு பயன்பாட்டிற்கு கொடுக்க முடியும். ஆனால், அதை செய்வதில்லை.

Tags : S. Jagadeesan ,Chennai Civil Engineers Association , Strict legislation should be enacted: S. Jagadeesan, Chairman, Chennai Civil Engineers Association
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...