லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற சட்டம் அமல்படுத்தப்பட்ட மறுநாளே, இச்சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கான அவசரச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நேற்று முன்தினம்தான் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்தார். இது அமலுக்கு வந்த மறுநாளே, இச்சட்டத்தின் கீழ் நேற்று முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் சட்டத்தின் கீழ், பரெய்லி மாவட்டத்தில் உள்ள தியோரனியா காவல் நிலையத்தில் ஓவைஸ் அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரெய்லியில் தனது மகளை ஓவைஸ் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்திற்கு மாறாக இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி அழுத்தம் கொடுப்பதாகவும், குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஓவைஸ் அகமது மீது கட்டாய மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகி விட்ட அவரை கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.