ஐதராபாத்: ஐதராபாத்தை பாக்யநகர் என ஏன் பெயர் மாற்றம் செய்யக் கூடாது என யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானா மாநிலம் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக இடையில்தான் கடும்போட்டி நிலவுகிறது. ஐதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர்; ஐதராபாத்தை பாக்யநகர் என ஏன் பெயர் மாற்றம் செய்யக் கூடாது? உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படியிருக்கையில் ஐதராபாத்தை ஏன் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய முடியாது? என கேள்வி எழுப்பினார்.