உடுமலை: குமரலிங்கம் வாரச்சந்தையில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரலிங்கம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடக்கிறது. குமரலிங்கம் மட்டுமின்றி சாமராயபட்டி, பெருமாள்புதூர், கொழுமம், ருத்ராபாளையம், ஆத்தூர், என்.ஜி.புதூர், மயிலாபுரம், மடத்தூர் உள்பட பல்வேற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த சந்தைக்கு காய்கறி வாங்க வருகின்றனர்.
வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்கின்றனர். இரவு வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி இல்லாததால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுபற்றி வியாபாரிகள் கூறும்போது, ‘தனியார் மின்விளக்கு வசதிக்காக வாடகையாக 40 ரூபாய் அளிக்கிறோம். ஆனால் இங்கு விளக்கு வசதி மற்றும் கழிப்பிட வசதி இல்லை. பேரூராட்சி மேற்கண்ட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்றனர்.