காங்கயம்: காங்கயம் அருகே, மீன் கழிவுகளை கொட்ட வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. காங்கயம் அருகே, வட சின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையம் பகுதியில் உள்ள குருசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 3 சரக்கு ஆட்டோக்களில் மீன் கழிவுகளை திருப்பூரில் இருந்து ஏற்றி வந்து, மேற்கண்ட இடத்தில் சிலர் கொட்டிச் சென்றனர்.இதன் காரணமாக ஏற்பட்ட துர்நாற்றத்தின் மூலமாக சுற்றுச்சூழல் சீர்கெடுவதை அறிந்த இப்பகுதி மக்களின் புகாரையடுத்து, நேற்று காலை மீன் கழிவுகளை ஏற்றி வந்த ஒரு சரக்கு ஆட்டோவை சிறைபிடித்தனர்.
தொடர்ந்து வட சின்னாரிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், ஊராட்சி ஒன்றிய சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, கொட்டிய மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். பிடிபட்ட சரக்கு ஆட்டோ உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி மன்ற அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.