×

தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரம் அகற்றம்

ஊட்டி: இரண்டாம் சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. நாள் தோறும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்படுவது வழக்கம். மேலும், மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதேபோல், ரோஜா பூங்ாவில், ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர பெரிய அளவிலான விழாக்கள், கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவதில்லை.

 எனினும், தாவரவியல் பூங்காவில் மட்டும் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தொட்டிகள் வரை தயார் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக கோடை விழா ரத்து செய்யப்பட்டது.  இதனால், இரண்டாம் சீசன் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. எனினும், தாவரவியல் பூங்காவில் வழக்கம் போல் மலர் செடிகள் செய்யப்பட்டது. 7 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

 கடந்த மாதம் மலர் செடிகள் அழுகிய நிலையில், மலர் செடிகள் வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் அகற்றப்பட்டன. அதேசமயம், அலங்கார செடிகள் மட்டும் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.தற்போது முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, மாடங்களில் உள்ள அனைத்து மலர் தொட்டிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. நடவு பணிகளுக்காக ெதாட்டிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

Tags : Removal ,Botanical Garden , Removal of flower decoration placed in pots in the Botanical Garden
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...