சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (42). சேலம் சுக்கம்பட்டியில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்ததுடன், மாட்டு தீவன ெதாழிலும் செய்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்த 15 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக அம்மாப்பேட்டை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்பின் நாமக்கல்லில் இந்த சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக போலி மந்திரவாதியும் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சிறுமிகள் இருவரும் சேலம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டது. அப்போது தங்களுக்கு நடந்த கொடுமைகளை அவர்கள் அதிர்ச்சியுடன் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் அவர்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவீந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.