×

அஞ்சலகங்களில் தூய்மை வாரம் கடைபிடிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அஞ்சலகங்களில் தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூய்மை இந்தியா திட்டத்தின் படி அஞ்சல் துறை, சென்னை வட்டம் சார்பில் கடந்த 16ம் தேதி முதல் தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அஞ்சலக ஊழியர்கள் மூலம் சென்னை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி தூய்மை, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மயிலாப்பூர், டாக்டர் சுப்ராயாநகர், தேனாம்பேட்டையில் உள்ள அஞ்சலக அலுவலர் குடியிருப்பில் தேவையற்ற செடி, கொடிகள் அகற்றப்பட்டு அங்கு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அஞ்சலகங்களில் முகக்கவசம், சோப்பு, கிருமி நாசினி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பிளாஸ்டிக் பயன்படுத்துதலுக்கு எதிராக அஞ்சலகங்களில் விழிப்புணர்வை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


Tags : post offices , Purity week observance at post offices
× RELATED வரும் 29ம் தேதி 24 தபால் நிலையங்களில் பென்சன் அதாலத் குறை தீர்ப்பு முகாம்