×

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி...3ம் கட்ட சோதனையை தொடங்கவுள்ளது எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி!!

சென்னை : இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் வெற்றி அடைந்ததால், அடுத்த வாரம் 3ம் கட்ட பரிசோதனை தொடங்கவிருப்பதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த ஜூலை 23ம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.

இதற்காக சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உட்பட இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் முதற்கட்ட பரிசோதனையில் 18 வயது முதல் 55 வயது வரையிலான தன்னார்வலர்கள் உடலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் நலமாக இருந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. அதன் படி, அடுத்த கட்டமாக 12 வயது முதல் 65 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையும் வெற்றி அடைந்து விட்டதாக எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும், 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.3ம் கட்ட பரிசோதனையில் சுமார் 1000 தன்னார்வலர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : SRM Medical College ,Phase 2 ,Kovacs , Kovacsin, Test, Success, SRM, College of Medicine
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...