×

ஆனைமலை அருகே சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே, சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, கடந்த 10நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் மக்கள் மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமலும், சீரான குடிநீர் வினியோகம் செய்யாமலும் காலம் தாழ்த்தினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் மற்றும் நண்பர்கள் வட்டார குழுவினர்  காளியாபுரம் பிரிவு பகுதியில் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இச்சம்பவத்தால் ஆனைமலை செல்லும் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், மாற்று வழியாக சென்றனர்.  இதையறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், எங்கள் பகுதிக்கு அடிக்கடி சீரான குடிநீர் வினியோகம் இல்லாமல் பாதிக்கப்படுவதால் அவதிப்படுகிறோம். பல  முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது’ என்றனர். இதையடுத்து போலீசார், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். அதன்பிறகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் காளியாபுரம் பிரிவு பகுதியில் பரபரப்பு உண்டானது.

Tags : road ,blockade ,Anaimalai , Anaimalai, drinking water supply, public, road blockade
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...