திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரில் அளவு 1000 கன அடியில் இருந்து தற்போது 6000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் அணையின் நீர்மட்டம் 33.7 அடியாகவும், நீர்வரத்து 7,044 கன அடியாகவும் உள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் அங்கு உள்ள ஏரிகள், குளங்கள் அதன் முழு கொள்ளளவை தற்போது எட்டியுள்ளது. பல ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக, பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 2, 624 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 33.35 அடியை எட்டி இருந்ததால், ஏரியின் பாதுகாப்பை கருதி பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5 மணி அளவில் 5, 6, 11, 14 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீரை கொசஸ்தலை ஆற்றின் வழியாக திறந்து விட்டனர்.
தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால்1000 கன அடியில் இருந்து 6000 கன அடியாக தண்ணீர் திறந்துள்ளார். அணையின் நீர்மட்டம் 33.7 அடியாகவும், நீர்வரத்து 7,044 கன அடியாகவும் உள்ளதா கூறப்படுகிறது. மேலும் நீர்வரத்துக்கு ஏற்ப திறக்கப்படும் நீரில் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.