×

நிவர் புயல் வேகம் ஆர்.கே.பேட்டை சோகம் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் முழ்கி வீணானது

*  சாலைகள் துண்டிப்பு * போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு: நிவர் புயல் வேகத்திற்கு ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துக்கொண்டு வீடுகளில் புகுந்தது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து விவசாய நிலங்களில், புகுந்ததால் மகசூலுக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.திருவள்ளூர் மாவட்டத்தில்  நிவர் புயல்  காரணமாக கடந்த 2 நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.  மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 118 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.  மலைகளிலிருந்து அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து  ஏரி குளங்கள் வேகமாக நிரம்பியது. பல்வேறு பகுதிகளில்  கால்வாய்கள்  தூர்வாரி சீர் செய்யாத நிலையில் மழை வெள்ளம்  சாலைகள், கிராமங்களில் சூழ்ந்துக்கொண்டது. இதனால், வீடுகளில் மழை நீர் சூழ்ந்து கிராமமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக பெரிய நாகபூண்டி எரி நிரம்பிய நிலையில் ஏரியில் இருந்து கசிவு ஏற்பட்டு வெள்ளம் அப்பகுதியில்  பெரிய நாகபூண்டி, சின்ன நாகபூண்டி, வி.பி.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்ட  நெற்பயிர், வாழை, கரும்பு உட்பட பயிர்கள் முற்றிலும் நீரில்  முழ்கி நாசமானது. மேலும், மகசூலுக்கு தயாராக இருந்த  பயிர் நாசமானதால், விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர்.

ஒன்றியத்தில் உள்ள தேவலாம்பாபுரம், சின்னநாகபூண்டி, வி.பி.ஆர்.புரம், வீரமங்கலம், மகன்காளிகாபுரம், நேசனூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளில் சூழ்ந்துக்கொண்டது. காற்றின் வேகத்திற்கு  மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு வீடுகளில் சூழுந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் நாசமானது. பாதிக்கப்பட்ட மக்களை  அதிகாரிகள் மீட்டு  பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.ஆர்.கே.பேட்டையிலிருந்து அம்மையார்குப்பம், ராகவநாயுடு குப்பம், பாலாபுரம், மகன்காளிகாபுரம்,  வி.பி.ஆர்.புரம், திருநாதராஜபுரம், நாராயணபுரம், தேவலாம்பாபுரம், ஜனகராஜகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் உள்ள தரைப் பாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேசனூர் பாலம் வெள்ளப் பெருக்கு அதிகரித்து சேதமடைந்துள்ளது.

ஒன்றியம் முழுவதும் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த பயிர் நீரில் முழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி கோ.ஹரி, மாவட்ட திமுக செயலாளர் எம்.பூபதி ஆகிய  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து  நிவாரண உதவி செய்தனர்.

நீர்நிலைகள் நிரம்பியது
நிவர் வேகத்திற்கு பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம்  நீர்தேக்க அணை முழுவதும் வேகமாக நிரம்பி வருவதால் உபரி நீர்  வெளியேற்றபட்டு வருகிறது. நேற்று இரவு வினாடிக்கு 110 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு  சீரிப்பாய்கிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை அதிகாரிகள் உஷார்படுத்தி பாதுகாப்பான பகுதிகளில் முகாம்களில் தங்க வைத்தனர்.

Tags : storm ,Nivar ,paddy fields , Nivar storm speed RKpet tragedy 1000 acres of paddy fields were submerged and wasted
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...