சம்பல்: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நடந்த சம்பவம், மனதை பிழிகிறது. சம்பவம் இதுதான்.இப்பகுதியில் விபத்தில் சிக்கி இறந்த சிறுமியின் உடல் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, வெள்ளை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. அதன் அருகே யாருமில்லை. அப்போது, தெரு நாய் ஒன்று அங்கு வருகிறது. சிறுமியின் உடலை அது கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்கிறது. இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் சிக்கிய தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுதான் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகவும், அவர்களின் அலட்சியத்தால் தனது மகள் இறந்து விட்டதாகவும் சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வார்டு பாய், துப்புரவு ஊழியரை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.