சென்னை : புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீரசோழபுரம் கிராமத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் அமைக்க ரூ.104.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.இதையடுத்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் வீர சோழபுரம் என்ற இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க அறநிலையத்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அக். 30ல் கருத்துக் கேட்பு கூட்டம் மக்களிடம் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டத்திற்கு 6 நாட்கள் முன்பே ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஆகவே கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுமான பணிகளுக்கு தடை
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது .அப்போது, 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை அரசுக்கு 1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்துக்கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும், பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்குக் காத்திருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதுவரை ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர்.